Thursday, 30 July 2020

ஆகச்சிறந்த ஆளுமைகள் - 1

தோல்வியைத் தோற்கடித்தவர் - ஜாக் மா




சீனாவிலுள்ள ஹாங்சௌ என்கிற நகரில் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 10 ஆம் தேதி பிறந்தார் ஜாக் மா. இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இவருடைய குடும்பத்தில் இவரையும் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள். இவர் இரண்டாவது குழந்தை. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை. 

சுட்டுப்போட்டாலும் படிப்பே வராது என்ற நிலையில்தான் இவருடைய பள்ளிப் படிப்பு சென்றது. ஆரம்பப்பள்ளித் தேர்வில் இரு முறை தோற்றுப்போனவர். நடுநிலைப்பள்ளி தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்தவர்.  கல்லூரி நுழைவுத்தேர்வில் இரு முறை தோல்வி அடைந்தவர்.  இப்படித்தான் இவருடைய கல்விப் பயணம் அமைந்திருந்தது. கல்லூரி நுழைவுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் 120 க்கு இவர் வாங்கிய மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு மதிப்பெண் மட்டும்தான். 

படிப்பு இப்படி என்றால் ஆள் பார்க்க எப்படி இருப்பார் தெரியுமா? ஒல்லியாகவும், குள்ளமாகவும், மிகவும் பலவீனமான ஒரு தோற்றமுடையவராகவே ஜாக் மா இருந்தார். இவருடைய உருவ அமைப்பே பார்ப்போரின் நகைப்பிற்கும் பரிகாசத்திற்கும் இவரை உள்ளாக்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் சிறப்பான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். ஜாக் மாவுக்கும் அது விதிவிலக்கல்ல. சிறு வயதிலிருந்தே ஜாக் மாவுக்கு ஆங்கிலம் கற்பதில் அலாதியான ஆர்வம் இருந்தது. 

இவருக்கு எட்டு வயது இருக்கும். அப்போது அவர் வாழ்ந்த நகருக்கு சுற்றுலாப்பயணிகளின் வரவு அதிகரித்த காலம் அது. அப்போது கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக ஜாக்  மாறினார்.  அதில் ஆங்கிலத்தை அதிகமாக கற்றுக் கொண்டார். இப்படியே காலம் கடந்தது. 

தன்னுடைய பட்டபடிப்புக்காக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு விண்ணபித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. மீண்டும் விண்ணபித்தார். மீண்டும் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அப்படியாக இவர் பத்து முறை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்டார். பின்னொரு நாளில் இது குறித்து அவர் பேட்டியளிக்கும் போது, ‘இன்று எந்த பல்கலைக் கழகத்தால் நிராகரிப்பட்டேனோ அதே பல்கலைக்கழகத்தில் நிச்சயம் ஒரு நாள் சிறப்புரை ஆற்றும் அளவிற்கு உயர்ந்து காட்டுவேன் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.’ என்று கூறினார். அதன்பின் வேறு வழியில்லாமல் 1980 ஆம் ஆண்டில் தன்னுடைய நகரிலேயே இருக்கும் நார்மல் என்கிற பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 3 வருட பட்டப்பிடிப்புக்கு பின்பு வேலை தேட ஆரம்பித்தார்.  




காவல் துறையில் பணிக்கு சேர இவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் விண்ணப்பித்தார்கள். இவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். கே.எப்.சி என்கிற புகழ்பெற்ற உணவு நிறுவனத்தின் மேலாளர் பணிக்காக இவரோட சேர்த்து மொத்தம் 24 பேர் விண்ணப்பித்தார்கள். அதிலும் இவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். இன்னொரு முறை இவரும் இவருடைய உறவினர் ஒருவரும் ஓர் உணவு விடுதியில் சர்வர் வேலை தேடிப் போனார்கள். இவருடைய உறவினருக்கு அந்த வேலை கிடைத்தது. அங்கேயும் ஜாக் நிராகரிக்கப்பட்டார். விரக்தியடைந்த ஜாக் ‘எனக்கு ஏன் இந்த வேலையைத் தரவில்லை?’ எனக் கேட்ட போது, உணவு விடுதியின் உரிமையாளர் ‘உன்னுடைய இந்த உருவத்தை எல்லாம் வாடிக்கையாளர்கள் முன்பு நிறுத்த முடியுமா? கேள்வி கேட்காமல் இடத்தை காலி செய்’ என்று விரட்டினார். இப்படியாக ஏறக்குறைய 30 வேலைகளுக்கு விண்ணப்பித்து எல்லாவற்றிலும் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தார். 

இக்காலகட்டத்தில் ஜாக் படித்த கல்லூரியில் பகுதி நேர ஆங்கில விரிவுரையாளருக்கான வேலை காலியாக இருந்தது. அது ஜாக் மாவுக்கு கொடுக்கப்பட்டது. ஊதியம் குறைவாக இருந்தாலும் இனியும் வெளியில் வேலை தேடி இன்னும் அவமானப்படுவதைவிட கிடைத்த இவ்வேலையைச் செய்யலாம் என செய்து வந்தார். சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. மேற்கத்திய நாடுகளோடு வணிகத் தொடர்பு வைக்க விரும்பிய சீன அரசுக்கு ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். அதைத் தனக்கு சாதகமாக்கிய ஜாக் மா அதில் தன்னையும் மொழிபெயர்ப்பாளராக இணைத்துக் கொண்டார். 

1995 இல் முதன்முறையாக அமெரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளராக ஜாக் மா சென்றிருந்த போது இணையம் இவருக்கு அறிமுகமானது. இனிவரும் நாட்களில் இணையம்தான் உலகின் எல்லா தளங்களிலும் வியாபித்திருக்கும் என்கிற எண்ணம் அப்போதே இவர் மனதிற்குள் உதயமானது.




சீனா பேஜ் என்கிற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா குறிப்பிட்ட காலத்தில் அதையும் மூட வேண்டியிருந்தது. பின்பு 1999 இல் தன்னுடைய மனைவி மற்றும் சீனாபேஜ் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அலிபாபா என்கிற நிறுவனத்தை தொடங்கினார். அதிலும் தொடக்கத்தில் எவரும் முதலீடு செய்ய முனவராத காரணத்தால் முடக்கத்தையே ஜாக் மா சந்திக்க வேண்டியிருந்தது. காலம் செல்லச் செல்ல ஜாக் மாவின் உழைப்பும் உறுதியும் அவருக்கு வெற்றியைக் கொண்டுவந்தது. இரு முன்னணி நிறுவனங்கள் அலிபாபா நிறுவனத்தில் முதலீடு செய்ய சம்மதித்தனர். ஜாக் மா தன்னுடைய கடின உழைப்பால் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஈபே என்ற பெரிய நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் சீனாவில் இருந்து ஓடிப்போனது. 

2017 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்டியலில்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் ஆன்லைன் வர்த்தகத்தையே தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துள்ள நிறுவனமாக அலிபாபா நிறுவனம் இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் ஜாக் மா என்கிற குள்ள மனிதனின் தோல்விகளும் அவமானங்களும் அதிகமாய் உள்ளன. 


Tuesday, 14 July 2020

கொரோனா ஓவியங்கள் - 6



சொக்கத் தங்கமாக ஒரு ரொட்டிக்  கடைகாரர் 



  

பொது முடக்கத்தில் இருக்கும் இந்நேரத்தில்

அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம்

அநியாய விலைக்கு ஆங்காங்கே விற்கப்படுகின்ற

அவலத்தை நாம் அறிகிறோம்.

அதிசயங்களாய் சில கடைகளும்

அத்தியாவசியத் தேவைகளைக்  குறைந்த விலையில்

அற்புதமாய் நிறைவு செய்கின்றன.

கோவை மாநகரில் ரெத்தினபுரி என்ற இடத்தில்

நெல்லை முத்து விலாஸ் என்ற ஒரு ஸ்வீட்ஸ் கடை.

ஆளில்லாத ரொட்டி கடைஎன்று

அதற்கு இப்போது பெயர் ஆயிற்று.

ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை ரூபாய் 30.

ஆள் எவரும் கடையில் இருப்பதில்லை.

ஆனால் பிரெட் பாக்கெட்டுகள் அடுக்கியிருக்கும்.

தேவைப்படும் பிரெட் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு

தகுந்த பணத்தை கல்லா பெட்டியில் போட்டுவிட்டு போகலாம்.

கல்லா பெட்டியில் காசு போடப்படாமலும் போகலாம்.

கல்லாவில் இருக்கும் காசு காணாமலும் போகலாம்.

கல்லாவே கூட களவாடவும் படலாம்.

ஆனால் கவலைப்படுவதில்லை கடைகாரர்.

கனிவும் கருணையும் இக்கடைகாரர் கற்றுத் தரும்

கருத்துள்ள பாடங்கள் அன்றோ!


பெறுகின்றவரின் முகம் கொடுப்பவருக்குத் தெரியாது

கொடுப்பவரின் முகம் பெறுகிறவருக்குத் தெரியாது.

முடிந்ததைத் கொடு தேவையானதை எடு என்று

முற்போக்குச் சிந்தனையை முழு வீச்சோடு வாழும்

ரொட்டிக்  கடைகாரர் மங்காத ஓவியம் அன்றோ!”


கொரோனா ஓவியங்கள் - 5



தோளில் உனைச் சுமந்து தொலை தூரம் போவேன் அம்மா




கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பக்கத்திலிருந்து

மஞ்சள் அறுவடைக்காக 15 பேர் கொண்ட ஒரு கூலித் தொழிலாளர் குழு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தது.

கொரோனா ஊரடங்கினால் வேலையுமில்லை, வருமானமுமில்லை.

சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்து

கள்ளக்குறிச்சியை நோக்கி அவர்களின் கால்கள் நடக்கத் தொடங்கின.

அதில் இன்னும் நெகிழ்ச்சியூட்டும் காரியம் எதுவென்றால்

பதினெட்டு வயது நிரம்பிய ஓர் இளைஞன்

பத்து மாதம் சுமந்து தன்னைப் பெற்றெடுத்த

தன்னுடைய மாற்றுத் திறனாளி தாயாரை

தனது தோள்களில் சுமந்தபடியே

ஏறக்குறைய 230 கிலோ மீட்டர் தூரம் நடந்து

தனது சொந்த ஊரை அடைந்திருக்கிறான்.

கருவறையில் கருவாக என்னைச் சுமந்தவள்

கண்களில் கண்ணீரை என்னால் சுமக்காமலிருக்க

கைகளில் வைத்து தாங்கிடுவேன் என்று செயல்பட்ட

இந்த வாலிபன் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமே.





பெற்றவளைப் பேணிக் காப்பதே பெரும் பேறு என்று

தன்னைச் சுமந்தவளைத் தான் சுமந்து

தரணியில் தாய் பிள்ளை உறவை உயிர்ப்பித்த

தங்க மகன் இவன் ஒரு தனிச்சிறப்பான ஓவியமே!”


கொரோனா ஓவியங்கள் - 4



சமயம் கடந்தும் சமாதி வரை சுமந்து போன  இஸ்லாமிய சொந்தங்கள் 




குஜராத் மாநிலம் பாவ்நகர் என்னுமிடத்தில் 

கொரோனா ஊரடங்கு சமயத்தில் 

70 வயது மூதாட்டி ரஞ்சன் பத்ரேஷ்வரா இறந்து போனார்.

இவர் ஓர் இந்து

இவருக்கு இரண்டு மகன்கள்

இறந்த பெண்மணியின்  இறுதி சடங்கிற்கு 

தூர இருந்த உறவுகளால் வர முடியவில்லை.

அருகில் இருந்த வீட்டார் அனைவரும் முகமதியர்கள்.

10 முகமதியப் பெண்கள் இறந்த பெண்ணின் உடலுக்கு 

கடைசி நீராட்ட பாசத்தோடு முன்வந்தனர்

10 முகமதிய ஆண்கள் மயானத்திற்கு உடலை சுமந்து செல்ல 

தோள் கொடுத்து தோழமையைக்  காட்டினர்

இப்படியாக இந்துப் பெண்மணி ஒருவருக்கு 

இந்து சமய முறைப்படியே இறுதி சடங்கு செய்து கொடுக்க 

முஸ்லீம் சமயத்து உறவுகள் 

முன்வந்தது முக்கியத்துவம் பெறுகிறது.

முன் மாதிரிப் பாடமாய் இருந்து 

சமய நல்லிணக்கத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.



பக்கத்துக்கு வீட்டைப் பகை வீடாய் பார்க்கும் உலகில் 

மாற்று மதத்தினரை  மனித நேயத்துடன் பார்க்காத உலகில்  

இந்துப் பெண்ணின் இறுதிச் சடங்கை 

இந்து சமய முறைப்படியே செய்திட உதவிய  

இந்த இஸ்லாமிய உள்ளங்கள் உன்னத ஓவியங்கள் தானே!


கொரோனா ஓவியங்கள் - 3




தாயெனும் சூரியனைத் தேடிப்போன சந்திரன் 





சந்திர மோகன் -

இவர் குஜராத்திலுள்ள அஹமதாபாத்தில் 

பொறியாளராக பணி செய்கிறார்

உடல் நலம் பாதிக்கப்பட்ட 

தன்னுடைய தாயைக் காண இவர் செல்ல வேண்டும்

ஆனால் கொரோனாவால்  ஊரடங்கு போடப்பட்டுள்ளது 

தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் இவருடைய சொந்த ஊர்.

தனது இரு சக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடங்கினார்

வழியில் உணவகங்கள் ஏதும் இல்லை.

வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் தான் வழியில் இவர் சாப்பாடு.

இரவு பகல் பார்க்கவில்லை.

கண் உறக்கம் தேடவில்லை.

களைப்பு கவ்விடவில்லை.

வெயிலும் பனியும் தடுக்கவில்லை.

சுமார் 2,300 கிலோ மீட்டர் தொலைவு.

4 நாட்கள் பயணம் செய்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துள்ளார்

தாயை 'குடியிருந்த கோவில்' என்கிறோம்

தாயென்னும் கோவிலைக் காக்க மறந்திட்ட  

பாவியாய்  நாம் ஆகாமல் இருக்க 

தாயைத் தேடி ஓடிய  இந்த சேய் நமக்கு பாடமாகட்டும்




தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு  

தன்னலத்தோடு வாழும் தனயன்கள் நடுவே 

தாயை பார்க்க தடைகளைத் தகர்த்து வந்த 

தனயன் சந்திர மோகன் தன்னிகரில்லாத ஓவியம் அல்லவா !



கொரோனா ஓவியங்கள் - 2



காசு வேண்டாம் காய்களை வாங்கிக்கொள்ளுங்கள்மாதேஸ் 




மாதேஸ் - இவர் 36 வயதான விவசாயி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள 

ஆலம்பாளையம் இவருடைய ஊர்

தன்னுடைய வயலில் விளைந்த 

சுமார் 8 டன்  காய்கறிகளை 

( 10 இலட்சம் மதிப்பு உடையது

காசு எதுவும் வாங்காமல் 

கருணை உள்ளத்தோடு 

ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.



"கொரோனா காலத்திலும் காசு பார்க்கும் கூட்டத்தில் 

காசை விலக்கி காருண்யம் காட்டிய 

விவசாயி மாதேஸ்  உண்மையில் 

வியக்கவைக்கும் ஓர் ஓவியமே !"


நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  16, ஏப்ரல் 2020.


கொரோனா ஓவியங்கள் - 1



65 வயது அறிவழகனின்   130 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் 




தஞ்சாவூர் மாவட்டத்தில் 

கும்பகோணம் அருகிலுள்ள ஒரு சிறு கிராமம்.

65 வயதான கணவர் அறிவழகன்.

60 வயதான அவருடைய மனைவி மஞ்சுளா.

ஏழைக் குடும்பம். மனைவிக்கு புற்றுநோய்.

கொரோனாவுக்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது. 

ஆனால் மனைவிக்கு மார்ச் 31 ஆம் தேதி 3வது கீமோ சிகிச்சை.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு போக வேண்டும்.

போக்குவரத்து வசதிகள் ஒன்றுமே இல்லை.

கை  பிடித்த கணவன் கை கட்டி வேடிக்கை பார்க்கவில்லை.

எப்படியாவது மனைவியை சிகிச்சைக்கு அழைத்துப்போக 

அறிவழகனுக்கு ஆசை. 

உறவுகள் உற்சாகப்படுத்தவில்லை.

மார்ச் 30 காலை 4.45 மணிக்கு  தன்னுடைய சைக்கிளை எடுத்தார்.

பின்னால் மனைவியை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

வழியில் காவலர்கள் நிறுத்திய போதெல்லாம்

 தன்னுடைய மனைவியின் மருத்துவ குறிப்பைக் காட்டினார்.

அவர்கள்  இருவருக்கும் உணவு கொடுத்து அனுப்பி  வைத்தனர்.

இரவு 10.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தனர். 

புற நோயாளிகளை அனுமதிக்காமல் இருந்தாலும் 

மருத்துவமனையின் அதிகாரிகள்

இவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்திருப்பதால்

 மஞ்சுளாவுக்கு கீமோ சிகிச்சை செய்து

 மறுநாள் ஆம்புலன்ஸ் ஒன்றில்

 அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தள்ளாடும் வயதிலும்   தன் அன்பு மனைவியை 

கால் வலிக்க சைக்கிளில் வைத்து  மிதித்து 

சுமார் 130 கிலோ மீட்டர் போனவரின் பயணம் 

உண்மையில் நமக்கெல்லாம் உறவின் மாண்பைச்  சொல்லும் 

ஓர் உன்னதப்  பாடம்.






மனைவியை மிதிப்பவர்களுக்கு மத்தியில் 

மனைவிக்காக சைக்கிள் மிதித்த

 அறிவழகன் ஓர் அழகான ஓவியம் தான்!!!