Sunday, 30 August 2020

கதையை வாசிங்க... கருத்தை யோசிங்க... (4)

மன்னிப்பு என்னும் மகத்தான அதிசயம்


பான்கெய் என்ற ஜென் துறவி தன்னுடைய சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு புதிய மனிதர் வந்தார். அவருக்கு புத்தர் மீதோ, ஜென் மீதோ நம்பிக்கை இல்லை. ஆகவே அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்காய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்றார் அமைதியாக. 

‘எங்களுடைய துறவிகள் என்னென்ன அதிசயங்கள் செய்கிறார்கள் தெரியுமா? தண்ணீர் மேல் நடப்பார்கள், தீயை அள்ளி விழுங்குவார்கள், சொடக்குப் போட்டால் தங்கம் வரும், பரவசமாய் ஆடினால் பூமியே நடுங்கும். ஆனால் இதுபோல எந்த அதிசயமும் செய்ய முடியாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்று வெறுப்பாகச் சொன்னார் அந்த மனிதர். 

புன்னகை ஒன்றை வீசியபடி பான்காய் சொன்னார்: ‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா, ஆனால் இவற்றை எல்லாம்விட வேறொரு பெரிய அதிசயத்தை எங்களால் செய்ய முடியும்.’ கண்கள் வியப்பில் விரிய, ‘அதென்ன?’ என்றார் அந்த மனிதர். 

அமைதியாகச் சொன்னார் பான்காய்: ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள் மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்.’


Wednesday, 26 August 2020

கதையை வாசிங்க... கருத்தை யோசிங்க... (3)

பாகற்காயும் பிடிக்கும் 



வினோபா பாவே என்பவர் காந்தியின் சீடராக சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது நடந்த நிகழ்வு இது. ஒரு முறை சாப்பிடும் வேளையில் உணவறையில் எல்லோரும் அமர்ந்திருந்தபோது பாகற்காய் கூட்டு எடுத்து எல்லோருக்கும் பரிமாறுகிறார் காந்தி. வினோபாவுக்கு பாகற்காய் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் காந்தியை ரொம்ப பிடிக்கும். 

எனவே பாகற்காய் கூட்டை வைத்துவிட்டு காந்தி நகர்ந்து போவதற்குள் கணப்பொழுது யோசித்தார் வினோபா. சட்டென்று அப்படியே அள்ளி வாயில்போட்டு விழுங்கிவிட்டார். அதைப் பார்த்த காந்தி, ‘உனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்குமோ’ என்று கேட்டபடியே மீண்டும் வினோபாவின் தட்டில் பாகற்காயை வைத்தார். 

அப்போது வினோபாவின் மனதில் ஒரு சிந்தனை உதித்தது: “விரும்புவதை விட்டுவிடுவது மட்டுமல்ல விரும்பாததையும், பிடிக்காததையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதும் கூட துறவறமே.”

Sunday, 23 August 2020

கதையை வாசிங்க... கருத்தை யோசிங்க... (2)

 

கடவுள் இருக்கிறார்



ஓர் இளம் அறிவியல் விஞ்ஞானி ஒரு முறை இரயில் பயணம் மேற்கொண்டார். அப்போது தன்னுடைய பக்கத்தில் இருந்த சக பயணியைக் கவனித்தார். அந்த மனிதர் அவருடைய கையில்  ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார். 

உடனே விஞ்ஞானி அந்த பயணியைக் கூப்பிட்டு, ‘நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்க அவரோ, ‘விவிலியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னார்.

அதைக் கேட்ட அந்த விஞ்ஞானிக்கு கோபம் தலைக்கேறியது. ‘நாம் வாழ்வது அறிவியல் யுகத்தில் என்பது தெரியாதா? இன்னும் கடவுள் நம்பிக்கை என்று எதற்கு முட்டாள் தனமாக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறாய்?’ என்று பொரிந்து தள்ளினார். 

அந்த உடன் பயணி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். மீண்டும் விஞ்ஞானி ‘உனக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வந்து பார். வாழ்க்கையை எப்படி அறிவியல் பூர்வமாக அணுகுவது என்று உனக்குக் கற்றுக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி தன்னுடைய முகவரி அட்டையை அந்த மனிதருடைய கைகளில் திணித்தார். 

சற்று நேரம் கழித்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. இரயிலிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அப்போது விஞ்ஞானி அந்த சக பயணியைப் பார்த்து ‘உன்னுடைய பெயர் என்ன?’ எனக் கேட்டார். அவரோ ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ என்றார். 

அதிர்ச்சியும் வியப்பும் மேலிட்டவராய், ‘ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை தனியாக வந்து சந்திக்க வேண்டும். எனக்கு நேரம் தாருங்கள்’ என்று கேட்டு அவருடைய ஆய்வகத்திற்கு வருவதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார். 

அடுத்த நாள் காலை தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆய்வத்தில் நுழைந்த அந்த இளம் விஞ்ஞானி அங்கே தயாரித்து வைக்கப்பட்டிருந்த அண்டவெளியின் நுண் மாதிரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டவராக, ‘ஐயா இதை யார் செய்தார்கள்?’ என்று வினவினார். 

எடிசன் புன்முறுவலோடு, ‘யாரும் செய்யவில்லை. நேற்று இரவில் இந்த இடத்தில் எதுவுமில்லை. இன்று காலையில் வந்து பார்த்தால் இது இருக்கிறது. ஒருவேளை அதுவாகவே வந்திருக்கும்’ என்று சொன்னார். இதைக் கேட்ட அந்த இளம் விஞ்ஞானி சிரித்துவிட்டு, ‘ஐயா, விளையாடாதீர்கள், சொல்லுங்கள்’ என்றார். 

மீண்டுமாக எடிசன் ‘உண்மையாகத்தான் சொல்கிறேன். அதுவாகவே உருவானதுதான். யாரும் இதைச் செய்யவில்லை’ என்று அழுத்தமாகச் சொன்னார். இளம் விஞ்ஞானிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஐயா, நிச்சயமாக இது அதுவாகவே உருவாக முடியாது என்பது எனக்கும் தெரியும். ஏன், உங்களுக்கும் தெரியும். பின் எதற்கு மறைக்கிறீர்கள்’ என்றார் விஞ்ஞானி.

அப்போது எடிசன் சொன்னார்: ‘இந்த அண்ட வெளியின் நுண்மாதிரியை எவரும் செய்யாமல் இது இங்கு இருப்பது சாத்தியமில்லை என்பது உண்மை என்றால், நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் மட்டும் எவரும் உண்டாக்காமல் அதுவாகவே எப்படி உருவாக முடியும்?’

இளம் விஞ்ஞானிக்கு அப்போதுதான் ஏதோ புரியத் தொடங்கியது. எடிசன் இன்னும் தொடர்ந்தார்: ‘படைப்புகள் இருக்கின்றனவென்றால் படைத்தவர் இருப்பது அவசியமல்லாவா? பிரபஞ்சம் மட்டும் எப்படி தானாகவே உருவாக முடியும்? அதை உண்டாக்க எவரும் தேவை என்பதை ஓரம் கட்டிவிட முடியுமா? படைப்பு உண்டெனில் படைத்தவரும் உண்டு அல்லவா!’. 


Friday, 14 August 2020

சுதந்திர திருநாள்

சுதந்திரம் - மந்திரமா? தந்திரமா?



மகான்கள் வாங்கித் தந்த சுதந்திரம்

மயானமாய் நாடு மாறுவதற்கா?

மண்ணின் மாண்பு பெற்ற சுதந்திரம்

மண்ணை விற்றுத் தீர்ப்பதற்கா?


மன்னர்களின் வீரத்தால் விளைந்த சுதந்திரம்

மனிதர்களை விறகாய் எரிப்பதற்கா?

பெண்களின் எழுச்சியால் பிறந்த சுதந்திரம்

பெண்ணைச் சிதைத்து சிறுமைப்படுத்துவதற்கா?


காந்தியின் அகிம்சை கண்ட சுதந்திரம்

காற்றையும் காசுக்கு விற்பதற்கா?

கண்ணீரும் செந்நீரும் தந்திட்ட சுதந்திரம்

தண்ணீரே இல்லாமல் தவிப்பதற்கா?


எளியோரின் போர்க்குரல் வென்றெடுத்த சுதந்திரம்

ஏழைகள் ஏற்றமின்றி வாடுவதற்கா?

சாதிமத பேதமின்றி சாதித்த சுதந்திரம்

சண்டைகள் செய்து சாவதற்கா?


தியாகிகளின் தீரத்தால் கிடைத்த சுதந்திரம்

தீண்டாமையின் சுவர்களுக்குள் சிக்குவதற்கா?

இந்தியா இணைந்து வென்ற சுதந்திரம்

இருட்டில் இருந்து வருந்துவதற்கா?


சுதந்திரம் சிலருக்கு மந்திரமானது -

அதனால் மகிமைகள் நடக்குது.

சுதந்திரம் சிலருக்கு தந்திரமானது -

அதனால் மர்மங்கள் நிலவுது.


சுதந்திரம் மனித தந்திரம் ஆகாமலிருக்கட்டும்!

சுதந்திரம் புனித மந்திரம் ஆகிடட்டும்!


இந்திய சுதந்திர திருநாள் வாழ்த்துகள்!!!


Monday, 10 August 2020

ஆகச்சிறந்த ஆளுமைகள் - 2

 எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்த எட்மண்ட் ஹிலாரி



நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாண்ட் என்னும் இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 20 ஆம் தேதி பிறந்தார் எட்மண்ட் ஹிலாரி. ‘ஹில்’லாரி (ஹில் - மலை) என்பதை தன்னுடைய பெயரில் வைத்திருப்பதாலோ என்னவோ எட்மண்ட் ஹிலாரிக்கு மலையேறுவதில் கொள்ளை விருப்பம். ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர், நியூசிலாந்திலுள்ள மலைகள் என்று இவர் தன்னுடைய கால்களால் அளவிட்ட மலைகள் பல உண்டு. 

மலையேறும் வீரராக இருந்த ஹிலாரி, தன்னுடைய வாழ்க்கையில் கொண்டிருந்த மாபெரும் கனவும், இலட்சியமும் எது என்றால் உலகத்தின் மிக உயரமான சிகரம் என்கிற பெருமைக்குரிய இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதாகும். அதுவரை எவரெஸ்ட் சிகரத்தை எவரும் தொட்டதில்லை என்பது, இவருடைய கனவை இன்னும்  பற்றி எரியச் செய்தது. மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அதுவரை பெற்றிருந்த எட்மண்ட் ஹிலாரிக்கு, எவரெஸ்ட்டின் உச்சியில் தன்னுடைய காலடித் தடத்தை எப்படியாயினும் பதித்துவிட வேண்டும் என்பது இதயத்துடிப்பாகவே மாறிப்போயிருந்தது. 

‘எட்டிவிடும் தூரத்தில் எவரெஸ்ட்டும் இல்லை. அதை விட்டுவிடும் நிலையில் நானும் இல்லை’ என்பதை எட்மண்ட் ஹிலாரியின் கடினமான பயிற்சியும் கைவிடாத முயற்சியும் தொடர்ந்து எண்பித்துக்கொண்டே இருந்தன. ‘ஹை அட்வெஞ்சர்’ (High Adventure) என்னும் தன்னுடைய நூலில் பின்னாளில் இது குறித்து அவர் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். 

முதல் முறை அவர் தன்னுடைய கனவுக்கு சிறகு கொடுத்து இமயமலையின் உச்சிக்கு ஏறத்தொடங்கியது 1952 ஆம் ஆண்டு. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் மலையேறும் குழுவுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு மலையேற்றக் குழுவுடன் இணைந்து 1952 இல் முதன் முறையாக எவரெஸ்ட் நோக்கிய தன் சாகசப் பயணத்தைத் தொடங்கினார் ஹிலாரி. அச்சமயத்தில் அதே குழுவில் இடம்பெற்றிருந்த இன்னொருவர் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கே என்பவர். சாதாரண கற்பாறைகளால் ஆன மலையில் ஏறுவதே மிகக் கடினம். பனிப்பாறைகளால் உருவான மலையில் ஏறுவது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது. பனிபோர்த்திய இமயமலையின் பரப்பில் ஹிலாரியின் இலட்சியக் காலடித்தடம் ஒவ்வொன்றாய் படியத் தொடங்கியது. 

இந்த முதல் பயணத்தில் முழுமூச்சாய் ஏறிய ஹிலாரிக்கு இயற்கை சாதகமாக அமையவில்லை. சுற்றுச் சூழலும் தட்பவெட்பநிலையும் மிகவும் மோசமாக இருந்ததால், தொடர்ந்து மலையேறுவது அக்குழுவில் எவருக்கும் சாத்தியப்படவில்லை. கனவுகளை நெஞ்சில் சுமந்து, தன் காலடித்தடத்தால் காலமும் நிலைக்கும் காவிய வரலாறு படைக்க நினைத்த ஹிலாரிக்கு இது பேரிடியாக இருந்தது. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு பயணத்தில் வந்த சவால்களை சமாளித்து முன்னோக்கி மேலே ஏறிச்சென்ற ஹிலாரி பெருத்த ஏமாற்றத்தோடு கீழே இறங்கி வந்தார். ஏறக்குறைய முக்கால்வாசி தொலைவை எட்டியும் இப்படி உச்சியைத் தொடாமல் திரும்பியது அவருடைய கனவுக்கோட்டையில் விழுந்த கல்லடியாக மாறிப்போனது. 


இந்நிகழ்வுக்குப் பின்பு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஓர் அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களிடம் உரையாற்ற ஹிலாரிக்கு அழைப்பு கொடுத்தனர். தோல்வியால் துவண்டு போயிருந்த ஹிலாரி முதலில் இங்கிலாந்துக்கு வர மறுத்தார். வெற்றியோடு மேடையேறுவது என்பது ஒரு வரம். ஆனால் தோல்வியோடு மேடை ஏறுவது என்பது ஒரு வலி. அந்த வலி ஹிலாரிக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். தோற்றுப்போன ஒருவனாக மேடையில் ஏறி மக்களைச் சந்திப்பது என்பது அவருக்கு வருத்தமளிக்கும் ஒன்றாக இருந்தது. ஆனால் ஹிலாரி எவ்வளவு மறுத்தாலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைக்கப்பட்ட காரணத்தால் இங்கிலாந்துக்குச் சென்றார். 

இந்த சிறப்பு நிகழ்வில் ஹிலாரி மேடையேறும் நேரம் வந்தது. அவருடைய பெயரை அறிவிப்பாளர் சொல்லி மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். அப்போது அரங்கம் முழுவதும் ஆரவாரமான கைதட்டலால் நிறைந்தது. இது ஹிலாரிக்கு உண்மையில் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. இதுவரை தன்னை தோற்றுப்போனவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ஹிலாரி இடியோசையை விஞ்சும் இந்த அரங்கத்திலுள்ள அனைவரின் கைதட்டலால் ஆனந்த கண்ணீர் சிந்தினார். மனதிற்குள் மறுபடியும் கனவுக் கோட்டை உயர்ந்து ஜொலித்தது. முதலில் அவரால் பேச முடியாத அளவிற்கு திக்குமுக்காடிப் போனார். 

மேடையில் நடுவே சென்று அங்கு மேடையின் பின்னணி ஓவியமாக வைக்கப்பட்டிருந்த இமயமலையின் ஓவியத்திலிருந்த எவரெஸ்ட்டைத் தன்னுடைய கையால் தொட்டு அவர் கூறிய வார்த்தைகள் எவை தெரியுமா?

“ஏ! எவரெஸ்ட் சிகரமே, முதன் முறை உன் உச்சியைத் தொட்டுவிட வந்த என்னை நீ தோற்கடித்துவிட்டாய். ஆனால் அடுத்த முறை நிச்சயம் நான் உன்னைத் தோற்கடித்துவிடுவேன். ஏனென்றால் நீ எப்படி வளர்ந்திருக்கிறாயோ அதே போல நானும் வளர்ந்துகொண்டிருக்கிறேன். உன் வளர்ச்சி முடிந்து விட்டது. என் வளர்ச்சி இன்னும் இருக்கிறது.”

அதன் பிறகு முயற்சியும் பயிற்சியும் இன்னும் கடினமாக இருக்கும்படி ஹிலாரி பார்த்துக்கொண்டார். அடுத்த ஆண்டே அதாவது 1953 இல் மீண்டும் மலையேற்றத்திற்கு அனுமதி கிடைத்தது. இந்த முறையும் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் இணைந்து மலையேறத் தொடங்கினர். 

1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வானளாவிய வரலாறு ஒன்று படைக்கப்பட்டது. வரலாற்றின் வசம் தன்னை விட்டுவிடாமல், வரலாற்றைத் தன்வசப்படுத்தியவர் எட்மண்ட் ஹிலாரி. ஆம். எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்த எட்மண்ட் ஹிலாரி என்று உலகம் இவரைப் போற்றியது. எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் இருவர் என்கிற பெருமை எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்வே ஆகிய இவர்களுக்கே உரித்தானது. 


தன்னை நெருங்க முடியாதபடி எந்த எவரெஸ்ட் சிகரம் எட்மண்ட் ஹிலாரியைக் கீழே தள்ளிவிட்டதோ, அதே எவரெஸ்ட் சிகரத்தை தான் எட்டிப்பிடித்ததோடு அல்லாமல் தன் காலடியால் அதன் உச்சியை அளந்தும்விட்டார் ஹிலாரி. எட்ட முடியாததை எட்டிப்பிடிக்க உன் உழைப்பையே ஏணியாக்கு. அதில் ஏறுவதற்கு விடா முயற்சியையும் தொடர் பயிற்சியையும் உன் இரு கால்களாக்கு. இதுவே ஹிலாரியின் எவரெஸ்ட்டை எட்டிய சாதனை நமக்குச் சொல்லும் பாடமாகும். 

இவர் இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து விமானப் படையில் பணியாற்றி உள்ளார். ஹிலாரியின் மகன் பீட்டர் ஹிலாரி என்பவரும் 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர் என்பது இன்னும் கூடுதல் ஆச்சரியம் தருகிறது. 1992 ஆம் ஆண்டில் ஹிலாரியினுடைய உருவம் பதித்த புதிய 5 டாலர் நோட்டை நியூசிலாந்து அரசு வெளியிட்டது. தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய உருவம் பதித்த டாலர் நோட்டைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நியூசிலாந்தைச் சேர்ந்த முதல் மனிதரும் இவரே. தனது 88 ஆவது வயதில் அதாவது 2008 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் ஹிலாரி தன் மண்ணக வாழ்வைத் துறந்தார். ஹிலாரியின் இறப்பிற்குப் பின்பு இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கி கௌரவித்தது.