Sunday, 30 August 2020

கதையை வாசிங்க... கருத்தை யோசிங்க... (4)

மன்னிப்பு என்னும் மகத்தான அதிசயம்


பான்கெய் என்ற ஜென் துறவி தன்னுடைய சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு புதிய மனிதர் வந்தார். அவருக்கு புத்தர் மீதோ, ஜென் மீதோ நம்பிக்கை இல்லை. ஆகவே அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்காய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்றார் அமைதியாக. 

‘எங்களுடைய துறவிகள் என்னென்ன அதிசயங்கள் செய்கிறார்கள் தெரியுமா? தண்ணீர் மேல் நடப்பார்கள், தீயை அள்ளி விழுங்குவார்கள், சொடக்குப் போட்டால் தங்கம் வரும், பரவசமாய் ஆடினால் பூமியே நடுங்கும். ஆனால் இதுபோல எந்த அதிசயமும் செய்ய முடியாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்று வெறுப்பாகச் சொன்னார் அந்த மனிதர். 

புன்னகை ஒன்றை வீசியபடி பான்காய் சொன்னார்: ‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா, ஆனால் இவற்றை எல்லாம்விட வேறொரு பெரிய அதிசயத்தை எங்களால் செய்ய முடியும்.’ கண்கள் வியப்பில் விரிய, ‘அதென்ன?’ என்றார் அந்த மனிதர். 

அமைதியாகச் சொன்னார் பான்காய்: ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள் மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்.’